slokas4kids.blogspot.com - Moondram pirai

24/04/2020 -  வெள்ளிக்கிழமை - (மூன்றாம் பிறை) சந்திர தரிசனம் 

மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். 

ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். 

மூன்றாம் பிறையானது...

சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.

slokas4kids.blogspot.com - Lord Shiva
மூன்றாம் பிறையை பார்த்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

மூன்றாம்பிறை பிறந்த கதை
ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். 

தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் . 

தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். 

இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறு அருளினார்.

மூன்றாம் பிறை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள்
சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு,
  • ஞாபக சக்தி அதிகரிக்கும். 
  • மனக்குழப்பம் நீங்கும். 
  • கண் பார்வை தெளிவாகும் 
  • ஆயுளை விருத்தியாக்கும்
  • செல்வங்களைச் சேர்க்கும்
  • பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும்

மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது அதுவும், திங்கட்கிழமையன்று (சோமவாரத்தில்) வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும். 

மூன்றாம் பிறைச்சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிசிப்பதால் மனதில் உள்ள கல்மஷங்கள் பாபங்கள் குழப்பங்கள் விலகி மன நிம்மதியும் , தெளிவான ஞானமும் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.


பிறை பார்ப்பதன் புண்ணியம்
வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. ஊர்மக்கள் அவரவர் பங்காக மணலைக் கொட்டி, உடையும் கரையை அடைத்தார்கள். மதுரை மாநகரில் பிட்டு விற்று வாழ்ந்து வந்த மூதாட்டியின் பங்கினை அடைக்க யாருமில்லை. அவள் தினமும் வழிபடும் சொக்கநாதப் பெருமானை நினைத்து வருந்தினாள். அவளது உண்மையான அன்பிற்கு செவிசாய்த்த இறைவர், தாமே கூலி ஆளாக வந்து அவள் பங்கிற்கு வேலை செய்தார் என்பது திருவிளையாடற்புராணம் கூறும் செய்தியாகும்.


கிழவியின் பங்கினை அடைக்க சிவபெருமானே கூலி ஆளாக வரவேண்டுமா? அப்பெருமான் தன்னிடம் உள்ள பூதக்கணங்களில் ஒன்றை அனுப்பி இருந்தாலே போதுமே! அப்பெருமானே ஆளாக வரும் அளவிற்கு அந்த மூதாட்டியின் தகுதி என்ன என்பது பற்றி சிந்திப்போம்.


திருவிளையாடற் புராணத்தை அருளிய பரஞ்சோதி முனிவர் திங்கள் ஆயிரம் தொழுதாள் என்று கூறுகின்றார். ஆயிரம் பிறையைத் தரிசித்த மேலான புண்ணியம் தான் அவள் பெற்றிருந்த தகுதியாகும்.


பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். பிறை, சிவபெருமான் திருமுடிமேல் இருப்பதல்லவா? பிறையை தரிசிக்கும் பொழுது பிறையணிந்த பெருமானை அல்லவா நாம் தரிசிக்கின்றோம்.

பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம். இன்று முதல் அனைவரும் பிறையை வணங்கும் உயர்ந்த வழக்கத்தை மேற்கொள்வோமாக!

பிறை பார்க்கும் பயன்
🌙 மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்.

🌙 நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும்.

🌙 ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.

🌙 ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.

🌙 ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும்.

🌙 பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும்.

🌙 வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும்.

🌙 நீடித்த பிறை தரிசனம் நீடுலக வாழ்வு தரும் ( முக்திப்பேறு )


மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வர்.

திருச்சிற்றம்பலம் ! சிவாய நம ஓம் !!

5 Comments

Unknown said…
Sooper manni.... Moondraam pirai story
Anonymous said…
மூன்றாம் பிறை பற்றிய விளக்கம் அருமை!!
அருமையான பதிவு
Unknown said…
Super. Informative.
Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe