கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். - குறள் 2

விளக்கம்: 
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை நம்பிக்கையுடன் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

கயிற்றால் கடவுளை கட்டியவன்...

துறவி ஒருவர் ஊர் ஊராக திருத்தலங்களை சேவிக்க பயணம் சென்று கொண்டிருந்தார்.

அவ்வாறு அவர் பயணித்து கொண்டு இருந்த போது ஒரு நாள் செல்லும் வழியில் இருந்த ஊரின் ஆற்றில் நீராடிவிட்டு, அந்த ஆற்றங்கரையில் இருந்த மரத்தடியில் அமர்ந்து கடவுளை நினைத்து தியானம் செய்தார்.  
Slokas4kids.blogspot.com - Moral Story
கண்களை மூடி... எந்தவொரு அசைவும் இல்லாமல் துறவி தியானம் செய்ததை, அங்கே மாடு மேய்த்து கொண்டிருந்த சிறுவன் ஒருவன் அதிசயமாக பார்த்தான்.

Slokas4kids.blogspot.com - Moral story


இதுவரை அவன் தியானம் செய்வதை பார்த்தில்லை. அதனால் துறவியின் செயல் அவனுக்கு அதிசயமாக இருந்தது. அவர் கண்விழித்த பிறகு என்ன செய்யப் போகிறார் என்பதை அறியும் ஆவல் அவனுக்குள் வந்து விட்டது.

அதனால் அவர் கண்விழிக்கும் வரை அவரையே கண்கொட்டாமல், கவனித்து கொண்டிருந்தான்.

நீண்ட நேரம் கழிந்தது. துறவியானவர் தியானம் கலைந்து கண்விழித்தார்.

அதற்காகவே காத்திருந்த அந்த மாடு மேய்க்கும் சிறுவன் அவரிடம் சென்று அவரை வணங்கினான்.

பிறகு தனது சந்தேகத்தை அந்த துறவியிடமே கேட்டான். "ஸ்வாமி! நீங்கள் இது வரையில் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?"

அதற்குத் துறவியானவர் சிறு புன்னகையுடன், "நான் கடவுளை நினைத்து அவரை காணவேண்டும் என்ற ஆவலில் தியானம் செய்து கொண்டிருந்தேன்." என்று கூறினார்.

அதைக் கேட்ட சிறுவன், "இந்த ஆற்றில் நீராடி, இந்த மரத்தடியில் உட்கார்ந்து கடவுளை நினைத்து தியானம் செய்தால் கடவுளை பார்க்க முடியுமா ஸ்வாமி?" என்று துறவியிடம் கேட்டான் அந்த சிறுவன்.

அதற்கு துறவி "ஆமாம். அப்படித்தான்!" என்று சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

அதை கேட்டதும் மாடு மேய்க்கும் அந்த சிறுவன், "ஏன் நாமும் அந்த துறவியை போலவே கடவுளை பார்க்க முயற்சிக்கக் கூடாது" என்று நினைத்தான்.

உடனடியாக அவனும் ஆற்றில் நீராடிவிட்டு, மரத்தடியில் கண்களை மூடி அமர்ந்து கடவுளை நினைத்து, "கடவுளே! நீ என் முன்னால் தோன்றி, எனக்குத் தரிசனம் தர வேண்டும்" என்று மனதிற்குள் திரும்பத் திரும்ப நினைத்து வேண்டி கொண்டிருந்தான்.

கள்ளம் கபடமில்லாத, குழந்தை உள்ளத்துடன், அந்த சிறுவன் தன்னை நினைத்து பிரார்த்தனை செய்ததைக் கண்ட கடவுளும் அவனுக்காக மனமிறங்கி சிறுவன் முன்னால் தோன்றினார்.

சிறுவனோ, அதற்கு முன் இவ்வாறு வேண்டியதுமில்லை கடவுளை நேரில் பார்த்ததுமில்லை. அதனால் அவன் நேரில் தோன்றிய கடவுளிடம் "நீங்கள் யார்? உங்களை நான் இதற்கு முன் பார்த்தில்லையே!" என்று வினவினான்.

கடவுள் அந்த சிறுவனிடம் சிரிப்போடு "நான்தான் கடவுள்! நீ என்னை பார்க்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாய் அல்லவா! அதனால் தான், இப்போது உனக்குக் காட்சி கொடுத்து இருக்கிறேன்" என்றார்.

சிறுவனுக்கோ சந்தேகம் "நீங்கள்தான் கடவுள் என்று நான் எப்படி நம்புவது?" என்றான் கடவுளிடமே.

"நான் தான் கடவுள் அதை நீ நம்பவேண்டும் என்றால் நீ அதற்கான சோதனையை செய்து கொள்!" என்றார்

அதற்கு அந்த சிறுவன் "சரி... அப்படி என்றால் ஏற்கனவே உங்களைப் பார்த்த ஒருவர் இங்கு வந்து, இவர்தான் கடவுள்! என்று உங்களைச் சுட்டிக்காட்டி கூறினால் நீங்கள் தான் கடவுள் என்று நம்புவேன்!" என்றான்.

இதை கேட்டதும் கடவுள் "ஓ.... அப்படியா! என்னை இதற்கு முன் பார்த்த யாரையாவது உனக்கு தெரியுமா?" என்று கேட்டார்.

"ஏன் தெரியாது? இங்கு சற்று முன் அமர்ந்து தியானம் செய்த துறவிக்கு உங்களைத் தெரியும் என்று சொன்னார்." என்றான் சிறுவன்.

"சரி. இப்போது எங்கே அவர்?" என்று கேட்டார் கடவுள்.

"அவர் இப்போது தான் இங்கிருந்து சென்றார். அதற்குள் அவர் நீண்ட தூரம் சென்றிருக்க மாட்டார். நான் அவரைத் தேடிப் பிடித்து இங்கு அழைத்து வருகிறேன். அவர் வந்து உங்களை அடையாளம் காட்டியதும். நீங்கள் தான் கடவுள் என்று நம்புகிறேன். அதுவரை நீங்கள் வேறு எங்கும் செல்லாமல் இங்கேயே இருக்க வேண்டும் புரிகிறதா!" என்று கடவுளுக்கே உத்தரவு போட்டான்..

அதற்கு கடவுள் "சரியப்பா... நீ கூறியபடியே நீ போய் அந்தத் துறவியை இங்கு அழைத்து வா! நான் அதுவரை எங்கும் செல்லாமல் இங்கேயே காத்திருக்கிறேன்" என்றார் புன்னகையோடு.

அதை கேட்ட சிறுவன் கடவுளிடம் "இப்படிச் சொல்லிவிட்டு, நான் இங்கிருந்து சென்றதும் தப்பி போய்விடலாம் என்று நினைக்கிறாயா? என்னை ஏமாற்ற முடியாது. நீ இங்கிருந்து தப்ப முடியாதபடி நான் உன்னை மரத்தில் 'கயிற்றால் கட்டிவிட்டு', பிறகு இங்கிருந்து சென்று துறவியை நேரில் அழைத்து வருகிறேன்," என்றான்.

அதற்கு கடவுள் "சரியப்பா... உனக்கு நம்பிக்கை வரவில்லை என்றால் நீ அப்படியே செய்" என்றார்.

உடனே சிறுவன் தனது நாலைந்து மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்தான். அந்தக் கயிறுகளை ஒன்று சேர்ந்து கடவுளை மரத்தில் நன்றாகக் இறுக்கி கட்டினான். கயிற்றை சோதித்து பார்த்து விட்டு தான் கட்டியதின் மேல் நம்பிக்கை வந்த பிறகு அந்த சிறுவன் துறவி சென்ற திசையை நோக்கி அவரை அழைத்து வர வேகமாக ஓடினான்.

தூரத்தில் சென்று கொண்டிருந்த துறவியை நெருங்கிய அவன், "ஸ்வாமி! நீங்கள் கூறியபடி நான் ஆற்றில் நீராடிவிட்டு மரத்தடியில் அமர்ந்து, கடவுளை நினைத்து 'கடவுளே! நீ என் முன்னால் தோன்றி எனக்குத் தரிசனம் தர வேண்டும்' என்று பிரார்த்தனை செய்தேன். அப்போது என் முன்னால் ஒருவர் தோன்றி, நான்தான் கடவுள். நீ பிரார்த்தனை செய்ததால், இப்போது உனக்குக் காட்சி கொடுத்திருக்கிறேன்" என்று கூறினார்.

"அவர் கூறியதை நான் நம்பவில்லை. ஆதலால் அவரை நான் ஒரு 'மரத்தில் கட்டிப் போட்டு' விட்டு வந்திருக்கிறேன். நீங்கள் அங்கு வந்து அவர்தான் கடவுளா? இல்லையா? என்று எனக்குச் சொல்ல வேண்டும். எனவே மீண்டும் அந்த ஆற்றங்கரை மரத்தடிக்கு வாருங்கள்" என்று கூறி அழைத்தான்.

அதனை கேட்டு அதிர்ந்து போன துறவி சிறுவனுடன் வேகமாக ஆற்றங்கரைக்கு வந்தார்.

அவரிடம் சிறுவன் மரத்தில் 'கட்டப்பட்டிருந்த கடவுளை' சுட்டிக்காட்டி துறவியிடம்,
"அதோ அந்த மரத்தில் பாருங்கள்! நான் இவரைத்தான் 'மரத்தில் கட்டிப்போட்டேன்'. இவர்தான் கடவுளா?" என்று கேட்டான்.

துறவியின் கண்களுக்கு 'மரத்தில் கட்டப்பட்டிருந்த' கடவுள் தெரியவில்லை.

எனவே அவர் சிறுவனிடம், "நீ என்ன சொல்கிறாய்? இங்கு யாருமே இல்லையே!" என்றார்.

அதற்குச் சிறுவன், "என்ன ஸ்வாமி சொல்கிறீர்கள்? நன்றாகப் பாருங்கள்! அதோ, அந்த 'மரத்தில் நான் கட்டி போட்டவர்' அங்கே தான் இருக்கிறாரே!" என்றான்.

துறவிக்கோ ஒன்றும் புரியவில்லை.

அப்போது மரத்தில் 'கட்டப்பட்டிருந்த கடவுள்' பேசலானார், "சிறுவனே! நீ கள்ளம் கபடமற்ற தூய உள்ளத்துடன், நம்பிக்கையோடு என்னை காணவேண்டும் என்று அழைத்தாய். அதனால் நான் உனக்குத் தரிசனம் கொடுத்தேன்."

"உனக்கு இருக்கும் அந்த நம்பிக்கை இந்தத் துறவிக்கு இல்லை. அதனால்தான் நான் உன் கண்களுக்கு மட்டும் தெரிகிறேன். துறவியின் கண்களுக்குத் தெரியவில்லை!" என்றார்.

அதைக் கேட்ட அந்த சிறுவன், கடவுளிடம் "கடவுளே! இவர் இன்று தான் எனக்கு அறிமுகமானவர் என்றாலும் இவர் கூறிய வழியை பின்பற்றியதால் தான், எனக்கு தங்களின் தரிசனம் கிடைத்தது. இவர் எனக்கு வழிகாட்டியவர் என்பதால் எனக்கு குரு போன்றவர். எனவே எனது கண்களுக்கு தெரிவது போலவே  இவருக்கும் தாங்கள் இப்போதே தரிசனம் கொடுங்கள்," என்று கேட்டுக்கொண்டான்.

சிறுவனின் பிரார்த்தனையை மனமார ஏற்று, கடவுள் அந்த துறவிக்கும் தரிசனம் கொடுத்தார்.

துறவியானவர் கடவுளை கண்குளிர கண்டு மகிழ்ந்தார்.

எனவே,

வாழ்க்கையில் கடவுள் மீதான நம்பிக்கை என்பது மிகவும் முக்கியத்துவம் உடையது. அந்த நம்பிக்கையுடன் நாம் கடவுளிடம் பிரார்த்தனை செய்தால் வேண்டியது நிச்சயமாக கிடைக்கும்.

எப்போதும்... நம்பிக்கையோடு குழந்தை மனதோடு... வேண்டுவோம் கடவுளை...

🙏

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe