குறள் :

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந்து உறும். (குறள் - 380)

பொருள் :
ஊழ்வினையால் தனக்கு நேரப்போவதை தடுக்க, வேறு வழிமுறைகளை ஒருவன் மேற்கொண்டாலும், ஊழ்வினையானது அந்த வழிமுறைகளையே தனக்குத் துணையாக்கிகொண்டு ஊழ்வினைப்பயனைக் கொடுக்கும். ஊழ்வினைப் பயனை ஒருவன் அனுபவித்தே ஆகவேண்டும், அதிலிருந்து தப்ப இயலாது.

சிலப்பதிகாரம் சொல்லும் மூன்று முக்கிய நெறிகளில் ஒன்றான “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” என்னும் கருத்தையே இந்த குறள் வலியுறுத்துகிறது.

கதை:
குருக்ஷேத்திர போர் முடிந்து விட்டது. அஸ்தினாபுரத்து அரசனாக தருமன் முடிசூட்டிக் கொண்டு விட்டான். பாண்டவர்களின் வம்சத்தையே அழிக்க முயன்றதால், துரோணரின் மகன் அஸ்வத்தாமன், மன நிம்மதியின்றி அலைந்து கொண்டிருந்தான்.

அவன் மனதில் ஒரு சந்தேகம் ஆட்டிப் படைத்தது. "என் தந்தை சத்தியவான். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காகவே, துரியோதனனுக்கு ஆதரவாக போர் புரிந்தார். ஆனால் அவரை... பாண்டவர்கள் நான் இறந்ததாக பொய் சொல்லி, அநியாயமாக கொன்று விட்டனர். என் தந்தை செய்த தவறு என்ன?" என மனதுக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தான். 

Slokas4kids - Thirukkural Kathaigal - Lord Krishnaஒருநாள் கிருஷ்ணரை சந்தித்தான். கிருஷ்ணர் மீது அவனுக்கு கோபம் இருந்தது. அதனால் அவரிடமே தன் மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டான். "என் தந்தையை அநியாயமாக கொன்றதற்கு நீதானே காரணம்; அவர் செய்த தவறு என்ன?" என்று கேட்டான். கிருஷ்ணர் சிரித்து விட்டு, "செய்த பாவத்துக்கு யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும்" என்றார். 

"அப்படி என்ன பாவம் செய்து விட்டார் என் தந்தை?" வினவினான் அஸ்வத்தாமன். கிருஷ்ணர் மீண்டும் சிரித்தார். "உன் தந்தை அனைத்து அஸ்திரங்களையும் கற்றவர். ஆனால் ஏழையாக இருந்தார். அவரை கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் குருவாக பீஷ்மர் நியமித்தார். அதன்பின்தான் அவரது வாழ்க்கையில் வளம் ஏற்பட்டது. கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் வில்வித்தை உட்பட அனைத்தையும் கற்றுக் கொடுத்தார் உன் தந்தை.

ஒரு நாள் ஏகலைவன் என்ற வேடுவர் இனத்தை சேர்ந்த சிறுவன் அவரை சந்தித்தான். "எனக்கும் வில்வித்தை கற்றுக் கொடுங்கள்" என உன் தந்தையிடம் கேட்டான். அரச குமாரர்களுக்கு கற்றுத் தருவதால் ஏகலைவனுக்கு கற்றுத் தர துரோணர் மறுத்து விட்டார். ஆனால் ஏகலைவன், உன் தந்தையை போல் மண்ணில் சிலை செய்து குருவாக வழிபட்டு, வில் வித்தையை தானாக கற்றுக் கொண்டான்.

சில ஆண்டுகளுக்கு பின் ஒரு சந்தர்ப்பத்தில் ஏகலைவனின் வில்வித்தை திறமை அர்ஜுனனுக்கு தெரிந்தது. அவன் துரோணரிடம் கோபம் அடைந்தான். ஏகலைவன் தானே கற்றுக் கொண்டதை அர்ஜுனனிடம் தெரிவித்து, அவனை உன் தந்தை சமாதான படுத்தி இருக்க வேண்டும். ஆனால் என்ன செய்தார்? வில்வித்தைக்கு மிகவும் தேவையான கட்டை விரலை குரு காணிக்கையாக ஏகலைவனிடம் உன் தந்தை கேட்டார். அவனும் மகிழ்ச்சியாக கொடுத்து, குரு பக்திக்கு நீங்காத புகழை பெற்றான். அரண்மனை பணி போய்விடும் என்ற சுயநலத்தில் உன் தந்தை சுயநலமாக நடந்து கொண்டு ஒரு வேடுவனின் திறமையை பாழடித்தார். 
ஏகலைவனுக்கு பெருமை கிடைத்தாலும், அவனது எதிர்காலம் வீணானதுக்கு உன் தந்தைதான் காரணம். இந்த பாவம்தான் போர்க்களத்தில் மகன் இறந்ததாக எண்ணி ஏற்பட்ட சோகத்தில் மரணமடைய வைத்தது. துரோணர் தியானத்தில் இருந்தபோது, அவரை திரவுபதியின் சகோதரன் அநியாயமாக கொலை செய்தான். அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் பாண்டவர்கள் தங்களின் வாரிசுகளை இழந்தனர்." என்று கூறி நிறுத்தினார் கிருஷ்ணர்.

உண்மைதான் என ஒப்புக் கொண்ட அஸ்வத்தாமன், "நீ நினைத்திருந்தால் இந்த யுத்தம் நடக்காமல் தடுத்திருக்கலாம். ஆனால் ஒரு வம்சமே அழிவதை வேடிக்கை பார்த்தாய். உனக்கு தண்டனை கிடையாதா?" என கேட்டான் அஸ்வத்தாமன். "ஏன் இல்லை? ஒரு வம்சம் அழிவதற்கு காரணமாக இருந்ததால், என் வம்சம் அழிவதை பார்த்த பின்தான் எனக்கு மரணம் ஏற்படும்." என்றார் கிருஷ்ணர்.

உண்மை தான்! யாதவ வம்சம் அழிந்து, காட்டில் தனிமையில் தியானத்தில் அமர்ந்திருந்த போது, மான் என நினைத்து வேடன் எய்த அம்பால், கிருஷ்ணரின் உயிர் பிரிந்தது.
Slokas4kids-Thirukkural kathaigal

செய்த தவறுக்கு தெய்வமாக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதை இக்கதையின் மூலம் நாம் அறியலாம்.

ஆகவே குழந்தைகளே! 
"நாம் எப்போதும் நல்லதே நினைக்க வேண்டும்; 
நல்லதே செய்ய வேண்டும்." 

*With inspiration and contribution from Karthik. 

1 Comments

Unknown said…
Very nice and useful. Please continue to do this wonderful job
Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe